செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

விநாயகர் நான்மணி மாலை'

பிள்ளையாரின் சிறப்புகளைக்கூறி படிப்பவர்க்கு நன்மை பயக்கும் அற்புதமான ஸ்லோகங்கள் இவை. புதுவை மணக்குள விநாயகரைக் குறித்து பாரதியார் பாடிய இந்த 'விநாயகர் நான்மணி மாலை'யின் கையெழுத்துப் பிரதியில் சில இடங்கள் பாரதியாரால் நிரப்பப் படாமல் இருந்தன. அவற்றைப் பின்னாளில் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளை, ஸ்ரீ சுத்தானந்த பாரதியார் ஆகியோர் பூர்த்தி செய்தனர். பிள்ளையாரை நினைத்துக்கொண்டு, இதை ஒருமுறை முழுக்கப் படித்தாலே ஒரு பரவசம் ஏற்படுவதை உணரலாம்.
அன்புடன், வெ.சுப்பிரமணியன்,ஓம்.


    வெண்பா
    சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
    சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா - அத்தனே!
    நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்
    இன்றிதற்குங் காப்பு நீயே.

    (1)


    கலித்துறை
    நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்
    நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
    வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
    தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

    (2)


    விருத்தம்
    செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;

    சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும்

    வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா,

    யானைமுகனே, வாணிதனைக் கையாலணைத்துக் காப்பவனே,

    கமலா சனத்துக் கற்பகமே.

    (3)


    அகவல்
    கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
    சிற்பர மோனத் தேவன் வாழ்க!
    வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
    ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
    படைப்பபுக் கிறையவன் பண்ணவர் நாயகன் 5
    இந்திர குரு என திதயத் தொளிர்வான்
    சந்திரமவுலித் தலைவன் மைந்தன்
    கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
    குணமதிற் பல வாம்; கூறக் கேளீர்;
    உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்; 10
    அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
    திக்கெல்லாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
    கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
    விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
    துச்ச மென்றெண்ணித் துயரிலா திங்கு 15
    நிச்சலும் வாழ்ந்து நிலை பெற்றோங்கலாம்;
    அச்சம் தீரும்; அமுதம் விளையும்;
    வித்தை வளரும்; வேள்வி யோங்கும்;
    அமரத் தன்மையு மெய்தவும்
    இங்கு நாம் பெறலாம்; இ·துணர் வீரே. 20

    கமலா சனத்துக் கற்பகமே.

    (4)


    வெண்பா
    உணர்வீர், உணர்வீர் உலகத்தீரிங்குப்
    புணர்வீர் அமரருறும் போகம் - கணபதியைப்
    போதவடி வாகப் போற்றிப் பணிந்திடுமின்
    காதலுடன் கஞ்சமலர்க் கால்.

    கமலா சனத்துக் கற்பகமே.

    (5)


    கலித்துறை
    காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
    நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
    வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
    கோலை மனமெனு நாட்டி னிறுத்தல் குறியெனக்கே.

    கமலா சனத்துக் கற்பகமே.

    (6)


    விருத்தம்
    எனக்கு வேண்டும் வரங்களை யிசைப்பேன் கேளாய் கணபதி,
    மனத்திற் சலன மில்லாமல், மதியிலிருளே தோன்றாமல்,
    நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல்வேண்டும்.
    கனக்குஞ் செல்வம் நூறு வய திவையுந்தர நீகடவாயே.

    கமலா சனத்துக் கற்பகமே.

    (7)

    கவல்
    கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
    பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்,
    விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்
    நாராயணனாய், நதிச்சடை முடியனாய்,
    பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி, 5
    அல்லா, யெஹோவா எனத் தொழுதின்புறும்
    தேவருந்தானாய், திருமகள், பாரதி,
    உமையெனுந் தேவிய ருகந்தவான் பொருளாய்,
    உலகெங்குங் காக்கு மொருவனைப் போற்றுதல்
    இந் நான்கே யிப் பூமி யிலெவர்க்கும் 10
    கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
    அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே.
    தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
    மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
    தனைத்தானாளுந் தன்மை நான் பெற்றிடில், 15
    எல்லாப் பயன்களுந் தாமே யெய்தும்;
    அசையா நெஞ்ச மருள்வாய்; உயிரெலாம்
    இன்புற்றிருக்க வேண்டி, நின் னிருதாள்
    பணிவதே தொழிலெனக் கொண்டு
    கணபதி தேவா, வாழ்வேன் களித்தே. 20

    (8)

    வெண்பா
    களியுற்று நின்று கடவுளே யிங்குப்
    பழியற்று வாழ்ந்திடக் கண் பார்ப்பாய் - ஒளிபெற்றுக்
    கல்விபல தேர்ந்து கடமை யெலா நன்காற்றித்
    தொல்வினைக் கட்டெல்லாம் துறந்து.

    (9)

    கலித்துறை
    துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
    குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
    அறந்தாங்கு மக்களு நீடூழி வாழ்கென அண்டமெலாம்
    சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.

    (10)

    விருத்தம்
    தவமே புரியும் வகை யறியேன், சலியா துற நெஞ்சறியாது,
    சிவமே நாடிப் பொழுதனைத்துந் தியங்கித் தியங்கி நிற்பேனை,
    நவமா மணிகள் புனைந்த முடி நாதா, கருணாலயனே, தத்
    துவமாகியதோர் பிரணவமே, அஞ்சேல் என்று சொல்லுதியே.

    (11)

    அகவல்
    சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்
    பல்லுருவாகிப் படர்ந்த வான் பொருளை,
    உள்ளுயிராகி உலகங் காக்கும்
    சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
    சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப் 5
    பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
    ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
    சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று,
    யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
    யார்க்கும் அன்பனாய், யார்க்கும் மினியனாய், 10
    வாழ்ந்திட விரும்பினேன்; மனமே! நீ யிதை
    ஆழ்ந்து கருதி, யாய்ந்தாய்ந்து, பலமுறை
    சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க்கெல்லாம்
    கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
    தேறித் தேறி, நான் சித்திபெற்றிடவே, 15
    நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
    பொன்னா லுனக் கொரு கோயில் புனைவேன்;
    மனமே, எனை நீ வாழ்த்திடுவாய்
    வீணே உழலுதல் வேண்டா,
    சக்திகுமாரன் சரண் புகழ்வாயே. 20

    (12)

    வெண்பா
    புகழ்வோங் கணபதிநின் பொற்கழலை நாளுந்
    திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே - இகழ்வோமே
    புல்லரக்கப் பாதகரின் பொய்யை யெலாம்; ஈங்கிதுகாண்
    வல்லபை கோன் தந்த வரம்.

    (13)

    கலித்துறை
    வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
    கரவும் புலமை விருப்பமுமையமுங் காய்ந்தெறிந்து
    சிரமீது நங்கள் கணபதி தாண்மலர் சேர்தெமக்குத்
    தரமேகொல்வானவர் என்றுளத்தேகளிசார்ந் ததுவே

    (14)

    விருத்தம்
    சார்ந்து நிற்பா யெனதுளமே, சலமுங்கரவுஞ் சஞ்சலமும்
    பேர்ந்து பரம சிவானந்தர் பேற்றை நாடி,நாடோறும்
    ஆர்த்த வேதப் பொருள் காட்டும் ஐயன்,சக்திதலைப்பிள்ளை,
    கூர்த்த விடர்கள் போக்கிடு நங் கோமான் பாதக் குளிர் நிழலே.

    (15)

    அகவல்
    நிழலினும் வெயிலினு நேர்ந்தநற் றுணையாய்த்
    தழலினும் புனலினு மபாயந் தவிர்த்து
    மண்ணினுங் காற்றினும் வானினு மெனக்குப்
    பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான்
    உள்ளத்தோங்க நோக்குறும் விழியும் 5
    மௌன வாயும் வரந்தரு கையும்
    உடைய நம் பெருமான் உணர்விலே நிற்பான்
    ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
    வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
    பிருஹஸ்பதியும் பிரமனும் யாவுந் 10
    தானே யாகிய தனிமுதற் கடவுள்
    யானென தற்றார் ஞானமே தானாய்
    முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
    ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
    நித்தமும் போற்று நிர்மலக் கடவுள் 15
    ஏழையர்க் கெல்லாம் மிறங்கும் பிள்ளை
    வாழும்பிள்ளை மணக்குளப் பிள்ளை
    வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
    செப்பிய மந்திரத் தேவனை
    முப்பொழு தேத்திப் பணிவது முறையே 20

    (16)

    வெண்பா
    முறையே நடப்பாய் முழுமுட நெஞ்சே,
    இறையேனும் வாடா யினிமேல் - கறையுண்ட
    கண்டன் மகன் வேத காரணன் சக்தி மகன்
    தொண்டருக் குண்டு துணை.

    (17)

    கலித்துறை
    துணையே, யெனதுயி ருள்ளே யிருந்து சுடர் விடுக்கும்
    மணியே, யெனதுயிர் மன்னவனே, யென்றன் வாழ்வினுக்கோர்
    அணியே, யெனுள்ளத்தி லாரமுதே, யெனதற்புதமே,
    இணையே துனக்குரைப்பேன், கடைவானில் எழுஞ்சுடரே.

    (18)

    விருத்தம்
    சுடரே போற்றி, கணத்தேவர் துரையே போற்றி, எனக்கென்றும்
    இடரே யின்றிக் காத்திடுவாய், எண்ணா யிரங்கால் முறையிட்டேன்;
    படர்வான் வெளியிற் பலகோடி கோடி கோடிப் பல்கோடி
    இடரா தோடுமண்டலங்க ளிசைத்தாய், வாழி யிறைவனே.

    (19)

    அகவல்
    இறைவி இறையவ னிரண்டு மொன்றாகித்
    தாயாய்த் தந்தையாய் சக்தியும் சிவனுமாய்
    உள் ளொளியாகி யுலகெலந் திகழும்
    பரம் பொருளேயோ! பரம்பொருளேயோ!
    ஆதிமூலமே! அனைத்தையுங் காக்கும் 5
    தேவ தேவா, சிவனே, கண்ணா,
    வேலா, சாத்தா, விநாயகா, மாடா,
    இருளா, சூரியா, இந்துவே, சக்தியே,
    வாணீ,காளீ, மாமகளேயோ,
    ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள 10
    தியாதுமாய் விளங்கு மியற்கைத் தெய்வமே;
    வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே,
    அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்,
    நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்;
    அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்; 15
    உடைமை வேண்டேன்,உன்துணை வேண்டினேன்
    வேண்டா தனைத்தையு நீக்கி
    வேண்டிய தனைத்தும் அருள்வதுன் கடனே.

    (20)

    வெண்பா
    கடமை தானேது கரிமமுகனே வையத்
    திடநீ யருள் செய்தா யெங்க - ளுடைமைகளு
    மினங்களு மெல்லா மீந்தாய் நீ யாங்களுனக்
    கென்புரிவோம் கைமா றியம்பு.

    (21)

    கலித்துறை
    இயம்பு மொழிகள் புகழ் மறை யாகு மெடுத்தவினை
    பயன்படும் தேவர்இருபோதும் வந்து பதந்தருவார்
    அயன் பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
    வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறு மேன்மைகளே.

    (22)

    விருத்தம்
    மேன்மைப் படுவாய் மனமே கேள் விண்ணி னிடிமுன் விழுந்தாலும்
    பான்மை தவறி நடுங்காதே, பயத்தா லேதும் பயனில்லை,
    யான் முன் னுரைத்தேன் கோடிமுறை இன்னுங்கோடி முறைசொல்வேன்
    ஆன்மாவான கணபதியின் அருளுண் டச்ச மில்லையே.

    (23)

    அகவல்
    அச்ச மில்லை, அமுங்குத லில்லை,
    நடுங்குதலில்லை, நாணுதலில்லை,
    பாவ மில்லை, பதுங்குத லில்லை;
    ஏது நேரினு மிடர்ப்பட மாட்டோம்;
    அண்டஞ் சிதறினா லஞ்ச மாட்டோம்; 5
    யார்க்கு மஞ்சோம்,எதற்கு மஞ்சோம்;
    எங்கு மஞ்சோம்,எப்பொழுது மஞ்சோம்;
    வான முண்டு மாரி யுண்டு,
    ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும்
    தீயு மண்ணுந் திங்களு மீன்களும் 10
    உடலு மறிவு முயிரு முளவே;
    தின்னப்பொருளுஞ் சேர்ந்திடப் பெண்டும்
    கேட்கப் பாட்டுங் காண நல்லுலகும்
    களித்துரை செய்யக் கணபதி பெயரும்
    என்று மிங்குளவாம்; சலித்திடாய், ஏழை 15
    நெஞ்சே; வாழி, நேர்மையுடன் வாழி,
    வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ'
    தஞ்ச முண்டு, சொன்னேன்,
    செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.

    (24)

    வெண்பா
    நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
    இமைப் பொழுதுஞ் சோரா திருத்தல் - உமைக்கினிய
    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
    சிந்தையே, இம்மூன்றுஞ் செய்.

    (25)

    கலித்துறை
    செய்யுங் கவிதை பராசக்தியாலே செய்யப்படுங்காண்
    வையத்தைக் காப்பவ ளன்னை சிவசக்தி வண்மையெலாம்
    ஐயத்திலுந் துரிதத்திலுஞ் சிந்தி யழிவதென்னே
    பையத் தொழில்புரி நெஞ்சே கணாதிபன் பக்தி கொண்டே.

    (26)

    விருத்தம்
    பக்தி யுடையார் காரியத்திற் பதறார், மிகுந்த பொறுமையுடன்
    வித்து முளைக்குந் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைவார்
    சக்தி தொழிலே யனைத்து மெனிற் சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
    வித்தைக் கிறைவா, கணநாதா, மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

    (27)

    அகவல்
    எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
    பொறுத்தா ரன்றே பூமியாள்வார்;
    யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல்
    செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்;
    பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்; 5
    மங்கள குணபதி மணக்குளக் கணபதி
    நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
    அகல்விழி உமையா ளாசை மகனே.
    நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
    உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி 10
    ஆள்வதும் பெரொளி ஞாயிறே யனைய
    சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
    நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
    காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
    காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம் 15
    கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே
    அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
    எங்குல தேவா, போற்றி!
    சங்கரன் மகனே தாளினைப் போற்றி.

    (28)

    வெண்பா
    போற்றி கலியாணி புதல்வனே பாட்டினிலே
    ஆற்ற லருளி யடியேனைத் - தேற்றமுடன்
    வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய் வாணியருள்
    வீணையொலி என்னாவில் விண்டு.

    (29)

    கலித்துறை
    விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
    தொண்டுன தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்
    பண்டைச் சிறுமைகள் போக்கி
    யென்னாவிற் பழுத்த சுவைத்
    தெண்டமிழ்ப் பாடலொரு கோடி
    மேவிடச் செய்குவையே.

    (30)

    விருத்தம்
    செய்யா ளினியாள் ஸ்ரீ தேவி செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்
    கையா ளெனநின் றடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து
    செய்வாள்; புகழ்சேர்வாணியு மென்னுள்ளே நின்று தீங்கவிதை
    பெய்வாள், சக்தி துணைபுரிவாள், பிள்ளாய், நின்னைப் பேசிடிலே.

    (31)


    அகவல்
    பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
    கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
    மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
    விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
    யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே 5
    இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
    செய்தல் வேண்டும், தேவ தேவா!
    ஞானாகா சத்து நடுவே நின்று நான்
    பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
    விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10
    சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
    திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
    'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே!
    இந்நாள், இப்பொழு தெனக் கிவ்வரத்தினை 15
    அருள்வாய்; ஆதி மூலமே! அநந்த
    சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
    நித்தியப் பொருளே சரணம்
    சரணம் சரணம் சரண மிங்குனக்கே.

    (32)


    வெண்பா
    உனக்கே யென்னாவியு முள்ளமுந் தந்தேன்
    மனக்கேதம் யாவினையும் மாற்றி - எனக்கே
    நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
    வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

    (33)


    கலித்துறை
    விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா
    குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொளுத்தியவன்
    அரங்கத்திலே திருமாதுடன் பள்ளிகொண்டான் மருகா
    வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

    (34)


    விருத்தம்
    வாழ்க புதுவை மணக்குளத்து வள்ளல் பாத மணி மலரே;
    ஆழ்க வுள்ளஞ் சலனமிலா தகண்ட வெளிக்கண் அன்பினையே
    சூழ்க; துயர்கள் தொலைந்திடுக; தொலையா இன்பம் விளைந்திடுக
    வீழ்க கலியின் வலியெல்லாம் கிருதயுகந்தான் மேவுகவே.

    (35)


    அகவல்
    மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
    எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
    பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
    இன்புறச் செய்வேன்; எதற்கு மினியஞ்சேல்;
    ஐயன் பிள்ளையார் அருளால் உனக்கு நான் 5
    அபய மிங்களித்தேன்.. நெஞ்சே
    நினக்கு நானுரைத்தன நிலை நிறுத்திடவே
    தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
    வெவ்விட முண்பேன். மேதினி யழிப்பேன்;
    மூடநெஞ்சே, முப்பது கோடி 10
    முறையுனக் குரைத்தேன்; இன்னுமொழிவேன்;
    தலையிலிடி விழுந்தால் சஞ்சலப்படாதே;
    ஏது நிகழினு 'நமக்கேன்' என்றிரு;
    பராசக்தி யுளத்தின்படி யுலக நிகழும்;
    நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள் 15
    இல்லை; நானெனும் எண்ணமே வெறும் பொய்'
    என்றான் புத்தன்; இறைஞ்சுவோ மவன்பதம்.
    இனி யெப்பொழுது முரைத்திடேன். இதை நீ
    மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!
    கவலைப்படுதலே கரு நரகம்மா! 20
    கவலையற்றிருத்தலே முக்தி;
    சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

    (36)


    வெண்பா
    செய்க தவம்! செய்க தவம்! நெஞ்சே! தவம் செய்தால்
    எய்த விரும்பியதை யெய்தலாம் - வையகத்தில்
    அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார்
    இன்புற்று வாழ்த லியல்பு.

    (37)


    கலித்துறை
    இயல்பு தவறி விருப்பம் விளைத லியல்வதன்றாம்
    செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
    பயிலு நல்லன்பை யியல்பெனக் கொள்ளுதிர் பாரிலுள்ளீர்
    முயலு வினகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.

    (38)


    விருத்தம்
    மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாக்கி
    எய்க்கு நெஞ்சை வலியுறுத்தி யுடலை யிருப்புக் கிணையாக்கிப்
    பொய்க்கும் கலியை நான் கொன்று, பூலோகத்தார் கண்முன்னே,
    மெய்க்குங் கிருத யுகத்தினையே கொணர்வேன், தெய்வ விதியி·தே.

    (39)


    அகவல்
    விதியே வாழி, விநாயகா வாழி,
    பதியே வாழி, பரமா வாழி,
    சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
    புதுவினை காட்டும் புண்ணியா, போற்றி!
    மதியினை வளர்க்கு மன்னே, போற்றி! 5
    இச்சையுங் கிரியயு ஞானமு மென்றாக்கு
    மூல சக்தியின் முதல்வா, போற்றி!
    பிறைமதி சூடிய பெருமாள் வாழி,
    நிறைவினைச் சேர்க்கு நிர்மலன் வாழி,
    கால மூன்றையுங் கடந்தான் வாழி! 10
    சக்தி தேவி சரணம் வாழி!
    வெற்றி வாழி, வீரம் வாழி!
    பக்தி வாழி, பலபல காலமும்
    உண்மை வாழி, ஊக்கம் வாழி!
    நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15
    பதங்களாம் கண்டீர், பாரிடைமக்களே!
    கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
    விரத நான் கொண்டனன்; வெற்றி
    தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!

வெள்ளி, 30 ஜனவரி, 2009

கண்ணம்மா - என் குழந்தை




 கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

ராகம் - பைரவி தாளம் - ரூபகம்

ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப
     தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
     ரிகம - ரிகரி -ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
     செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
     ஏற்றம் புரிய வந்தாய்! 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
     பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
     ஆடி வருந்தேனே! 2

ஓடி வருகையில் - கண்ணம்மா
     உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
     ஆவி தழுவு தடீ! 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
     ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
     மேனி சிலிர்க்கு தடீ! 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
     கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
     உன்மத்த மாகு தடீ! 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
     சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
     நெஞ்சம் பதைக்கு தடீ! 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
     உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
     என்னுயிர் நின்ன தன்றோ? 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
     துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
     மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
     ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
     ஆகுமோர் தெய்வ முண்டோ? 9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
     வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
     செல்வம் பிறிது முண்டோ? 10

திங்கள், 26 ஜனவரி, 2009

மகாகவி பாரதியாரின் முரசு பாடல்

மகாகவி சுப்ரமணியபாரதியாரின் முரசு பாடல்

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

1. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

3. பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

4. நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

5. ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

6. ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்.

7. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

11. தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்.

12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

13. யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

14. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

15. சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

16. எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

18. நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

19. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

20. அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

21. உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

22. மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை.

23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

24. உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

25. வலிமை யுடையது தெய்வம், - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

26. தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

27. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

28. அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

29. பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

மகாகவி பாரதியார் - பாப்பாக்களுக்கு எழுதிய பாடல்

பாரதியின் பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!1

சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! 10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! 16


இப்பாடல் பாடல் பாப்பாக்களுக்கு மட்டுமல்ல ! பாப்பா என்ற இடத்தில் யாரை வேணுமானாலும் போட்டுக்கொள்ளலாம் .பொருத்தமாகவே அமையும் .

புதன், 21 ஜனவரி, 2009

மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி

அ வரிசை”
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிகவிரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
“க வரிசை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கௌவியதை விடேல்
“ச வரிசை”
சரித்திரம் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
“ஞ வரிசை”
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிறு என இன்புறு
ஞேகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல் செய்
த,ந,ப வரிசைகள்
“த வரிசை”
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
“ந வரிசை
நன்று கருது
நாளெல்லாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்ப்பது கைவிடேல்
“ப வரிசை”
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு
“ம வரிசை”
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங் கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்முறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியந்தனைக் கொல்
“ய வரிசை”
யவனர் போல் முயற்சி கொள்
யாரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
“ர வரிசை
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
“ல வரிசை”
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சி செய்
லீலை இவ்வுலகு
உலுத்தரை இகழ்
உலோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
“வ வரிசை”
வருவதை மகிழ்ந்துண்
வானநூல் பயிற்சி கொள்
விதையினைத் தேர்ந்தெடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
&&&&&&&&&&