வெள்ளி, 30 ஜனவரி, 2009

கண்ணம்மா - என் குழந்தை




 கண்ணம்மா - என் குழந்தை

(பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு)

ராகம் - பைரவி தாளம் - ரூபகம்

ஸ ஸ ஸ - ஸா ஸா - பபப
     தநீத - பதப - பா
பபப - பதப - பமா - கரிஸா
     ரிகம - ரிகரி -ஸா

என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக.

சின்னஞ் சிறு கிளியே - கண்ணம்மா!
     செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
     ஏற்றம் புரிய வந்தாய்! 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
     பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
     ஆடி வருந்தேனே! 2

ஓடி வருகையில் - கண்ணம்மா
     உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
     ஆவி தழுவு தடீ! 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
     ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
     மேனி சிலிர்க்கு தடீ! 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
     கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா
     உன்மத்த மாகு தடீ! 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
     சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
     நெஞ்சம் பதைக்கு தடீ! 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
     உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
     என்னுயிர் நின்ன தன்றோ? 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
     துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
     மூர்க்கந் தவிர்த்திடு வாய். 8

இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்
     ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலே - உனைநேர்
     ஆகுமோர் தெய்வ முண்டோ? 9

மார்பில் அணிவதற்கே -உன்னைப்போல்
     வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே -உன்னைப் போல்
     செல்வம் பிறிது முண்டோ? 10

திங்கள், 26 ஜனவரி, 2009

மகாகவி பாரதியாரின் முரசு பாடல்

மகாகவி சுப்ரமணியபாரதியாரின் முரசு பாடல்

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

1. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்.

2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்.
நீதி நிலைதவ றாமல் - தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.

3. பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.

4. நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே - செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.

5. ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே - மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை;

6. ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல
வீடு நடத்துதல் கண்டோ ம்.

7. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.

8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.

11. தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும்
ஓர்பொருளானது தெய்வம்.

12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்,
கோவிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்.

13. யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

14. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை
பேருக் கொருநிற மாகும்.

15. சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.

16. எந்த நிறமிருந்தாலும் - அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும் - இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?

17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில்
மானுடர் வேற்றுமை யில்லை;
எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.

18. நிகரென்று கொட்டு முரசே! - இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.

19. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.

20. அன்பென்று கொட்டு முரசே! - மக்கள்
அத்தனைப் பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.

21. உடன்பிறந் தார்களைப் போலே - இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?

22. மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு
சேர்த்த உணவெல்லை யில்லை.

23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

24. உடன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?

25. வலிமை யுடையது தெய்வம், - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதத்திட லாமோ?

26. தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன்
தானடிமை கொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?

27. அன்பென்று கொட்டு முரசே! - அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.

28. அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.

29. பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர்
பற்றுஞ் சகோதரத் தன்மை
யாருக்கும் தீமைசெய் யாது - புவி
யெங்கும் விடுதலை செய்யும்.

30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.

31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

மகாகவி பாரதியார் - பாப்பாக்களுக்கு எழுதிய பாடல்

பாரதியின் பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா! - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!1

சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா! 4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா!7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா! 10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா! 11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா! 12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா! 13

வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா! 14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
வாழும் முறைமையடி பாப்பா! 16


இப்பாடல் பாடல் பாப்பாக்களுக்கு மட்டுமல்ல ! பாப்பா என்ற இடத்தில் யாரை வேணுமானாலும் போட்டுக்கொள்ளலாம் .பொருத்தமாகவே அமையும் .

புதன், 21 ஜனவரி, 2009

மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி

அ வரிசை”
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண் மிகவிரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறு போல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம்
ஓய்தல் ஒழி
ஔடதம் குறை
“க வரிசை
கற்றது ஒழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல்
கீழோர்க்கு அஞ்சேல்
குன்றென நிமிர்ந்து நில்
கூடித்தொழில் செய்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கை கொண்டு வாழ்
கௌவியதை விடேல்
“ச வரிசை”
சரித்திரம் தேர்ச்சிகொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்
சீறுவோர்ச் சீறு
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்
சைகையில் பொருள் உணர்
சொல்வது தெளிந்து சொல்
சோதிடம்தனை இகழ்
சௌரியம் தவறேல்
“ஞ வரிசை”
ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞிமிறு என இன்புறு
ஞேகிழ்வது அருளின்
ஞேயம் காத்தல் செய்
த,ந,ப வரிசைகள்
“த வரிசை”
தன்மை இழவேல்
தாழ்ந்து நடவேல்
திருவினை வென்றுவாழ்
தீயோர்க்கு அஞ்சேல்
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி
தெய்வம் நீ என்று உணர்
தேசத்தை காத்தல் செய்
தையலை உயர்வுசெய்
தொன்மைக்கு அஞ்சேல்
தோல்வியில் கலங்கேல்
தவத்தினை நிதம் புரி
“ந வரிசை
நன்று கருது
நாளெல்லாம் வினைசெய்
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர்
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை
நொந்தது சாகும்
நோற்ப்பது கைவிடேல்
“ப வரிசை”
பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்புசெய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிது கேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு
“ம வரிசை”
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங் கொடேல்
மெல்ல தெரிந்து சொல்
மேழி போற்று
மொய்ம்முறத் தவம்செய்
மோனம் போற்று
மௌட்டியந்தனைக் கொல்
“ய வரிசை”
யவனர் போல் முயற்சி கொள்
யாரையும் மதித்து வாழ்
யௌவனம் காத்தல் செய்
“ர வரிசை
ரஸத்திலே தேர்ச்சி கொள்
ராஜஸம் பயில்
ரீதி தவறேல்
ருசி பல வென்றுணர்
ரூபம் செம்மை செய்
ரேகையில் கனி கொள்
ரோதனம் தவிர்
ரௌத்திரம் பழகு
“ல வரிசை”
லவம் பல வெள்ளமாம்
லாகவம் பயிற்சி செய்
லீலை இவ்வுலகு
உலுத்தரை இகழ்
உலோக நூல் கற்றுணர்
லௌகிகம் ஆற்று
“வ வரிசை”
வருவதை மகிழ்ந்துண்
வானநூல் பயிற்சி கொள்
விதையினைத் தேர்ந்தெடு
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு
வேதம் புதுமைசெய்
வையத் தலைமைகொள்
வௌவுதல் நீக்கு
&&&&&&&&&&